| ADDED : ஜன 15, 2024 04:30 AM
பரமக்குடி : -பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நிலவும் குளறுபடிகளை சீர் செய்ய வலியுறுத்தி எமனேஸ்வரத்தில் ஜன., 23 மாலை ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.பரமக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டக் குழு கூட்டம் தலைவர் ராதா தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ராஜன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் பேசினர்.பரமக்குடி, எமனேஸ்வரத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் வழக்கமாக வழங்குகின்ற பட்டு நுால் வாங்க பெர்மிஷன் வழங்குவதில் பணம் கொடுக்கும் சங்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வரின் பெயரைச் சொல்லி கலைஞர் நுாற்றாண்டு விழா என்ற பெயரில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பேரவை கூட்டம் நடத்தி அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வாங்கி செல்வது தொடர்கிறது.ரிபேட் மானியம் வரவு செய்யும் போது 3 முதல் 5 சதவீதம் கமிஷன் கேட்கும் உதவி பரமக்குடி கைத்தறி இயக்குனர் அலுவலகம், அந்த தொகை அமைச்சருக்கு தான் செல்கிறது எங்களுக்கு ஏதுமில்லை எனக் கூறி வசூல் வேட்டை தொடர்வது அவலத்தின் உச்சம்.இதனைக் கண்டித்து எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் ஜன.23 மாலை 6:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.