| ADDED : ஜன 26, 2024 01:49 AM
ராமேஸ்வரம்:தைப்பூச விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயில் உபகோயிலின் தீர்த்த குளத்தில் அலங்கரித்த தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி உலா வந்தனர்.நேற்று தைப்பூச விழாவையொட்டி காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலுக்கு புறப்பாடாகினர்.இதையடுத்து கோயில் நடை அடைக்கப்பட்டது. பின் வீதியில் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசித்தனர். இதையடுத்து லட்சுமணேஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மன் சென்றதும் நேற்று மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.இதையடுத்து அங்குள்ள தீர்த்த குளத்தில் அலங்கரித்த தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் இரவு 7:40 மணிக்கு தெப்ப தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்தபடி குளத்தில் வலம் வந்தனர். அப்போது தீர்த்த குளத்தை சுற்றிலும் நின்ற ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.