| ADDED : ஜூன் 14, 2024 01:06 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம் மூதுார் கிராமத்தில் 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவில் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 9:30 மணிக்கு, அரக்கோணம் ---- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கனகம்மாசத்திரம் --- அரக்கோணம் வரை செல்லும் டி-90 அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.தகவல் அறிந்து வந்த அரக்கோணம் பி.டி.ஓ., சுரேஷ் சவுந்தர்ராஜன் பேச்சு நடத்தி, விரைந்து குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.