உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக நீடிப்பு: டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக நீடிப்பு: டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம், 71.23 அடியாக இருப்பதால் வரும் ஜூன் மாதத்தில் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், அணை நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த, 2022ல் குறித்தபடி ஜூன் 12ல் நீர்திறக்கப்பட்டது. நீரை பயன்படுத்தி, 12 டெல்டா மாவட்டங்களில், 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை, 17.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது.

4.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி

ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி, 28 வரை மொத்தம், 8 மாதம், 231 நாள் அணையில் பாசனத்துக்கு நீர்திறக்கப்படும். கடந்த ஜன.28 ல் அணை நீர்மட்டம், 103 அடியாக இருந்தது.இதனால், கடந்த ஜூன் 12ல் குறித்தபடி டெல்டா பாசனத்துக்கான நீரை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் அணை நீர்மட்டம், 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு அதிகபட்சமாக வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு டெல்டாவில், 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்தது.

நவ.,11ல் நிறுத்தம்

அதன் பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் கடந்த அக். 10ல் அணை நீர்மட்டம், 30.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 163 கனஅடியாகவும் வெகுவாக சரிந்தது. இதனால், டெல்டா நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த நவ.,11ல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்காக நேற்று வினாடிக்கு, 600 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 71.23 அடியாகவும், நீர் இருப்பு, 33.76 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. டெல்டாவுக்கு ஜூன் 12ல் நீர்திறக்க அணை நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். பாசனத்துக்கு நீர்திறக்க இன்னமும், 18 டி.எம்.சி., நீர் தேவை. குளிர் காலம் முடிந்து விரைவில் கோடை காலம் துவங்க உள்ளதால் வரும் ஜூன் மாதம் வரை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பில்லை.இதனால், கடந்த ஆண்டு டெல்டாவில், 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதித்த நிலையில் நடப்பாண்டு, 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல் உற்பத்தி பாதிப்பு

ஒரு ஏக்கரில் வெள்ளை பொன்னி சாகுபடி செய்தால், 2,500 கிலோ நெல்கிடைக்கும். இதில், தவிடு போக, 60 சதவீதம் அதாவது, 1,350 கிலோ அரிசி கிடைக்கும். அதை கணக்கிடுகையில் கடந்த ஆண்டு, 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதித்ததால், 202 கோடியே, 50 லட்சம் கிலோ அரிசி உற்பத்தி குறைந்துள்ளது.நடப்பாண்டு, 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை பாதிக்கும் பட்சத்தில், 60 கோடியே, 75 லட்சம் கிலோ அரிசி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் உற்பத்தி பாதிக்கும் பட்சத்தில் நடப்பாண்டு தமிழகத்தில் அரிசி விலை உயர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை