சந்தையில் மழையில் நனையும் வியாபாரிகள், விவசாயிகள்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், சந்தைபேட்டையில் திங்கள்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் கடை வைக்கின்றனர். மேற்கூரையுடன் கூடிய ஒரு சில கடைகள் மட்டும் உள்ளன. பலர், தரையில் கடை விரிக்கின்றனர். மழை காலத்தில், தரையில் கடை வைக்கும் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.நேற்று மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மழை பெய்தது. திறந்தவெளியில் தரையில் கடை வைத்தவர்கள் மழையில் நனைந்தபடி, வியாபாரம் செய்தனர். மழை நீரில் காய்கறி, உணவு பொருட்கள் நனைந்து வீணாகியது. தரையில் இருந்த கடைகளை சுற்றி, சேறு, சகதி, தண்ணீர் தேங்கியது.பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். கூடுதலாக மேற்கூரையுடன் கூடிய கடைகள் கட்ட டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.