| ADDED : டிச 04, 2025 05:21 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு இளையான்குடி, சிவகங்கையில் 10 வீடுகள் வரை சேதமானது. அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவானது. டிட்வா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளில் மழை பெய்துள்ளது. சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவு நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 45 மி.மீ., திருப்புத்துாரில் 41.20 மி.மீ., தேவகோட்டை 12 மி.மீ., சிவகங்கையில் 2 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு மாவட்ட அளவில் 9 ஓட்டு வீடுகள் பகுதியும், ஒரு வீடு முழுவதும் சேதமானது. தேவகோட்டை நித்யகல்யாணிபுரத்தில் செல்வி என்பவரது ஓட்டு வீடு முழுவதும் சேதமானது. இதில், வீட்டில் படுத்திருந்த அவரது கணவர் பாண்டி, செல்வி இருவரும் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.