| ADDED : ஆக 06, 2024 12:25 AM
சிவகங்கை:''தி.மு.க.,வில் போதை பொருள் அணி என்று ஒன்றை உருவாக்கலாம்,'' என, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா பேசினார்.அவர் மேலும் பேசியதாவது: 2026ல் தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் தற்போதே உழைக்க துவங்க வேண்டும். தமிழகத்துக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் 6 வந்தே பாரத் ரயிலை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலிருந்து பேசாதவர்கள் எம்.பி.,யாக சென்றுள்ளனர். தி.மு.க., என்றாலே ஊழல் நிறைந்த கட்சி. தமிழகத்தில் தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த உடன் அரசு டாஸ்மாக்கை மூடுகிறேன் என தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் அவர்களால் டாஸ்மாக் கடைகளை மூட முடியவில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் 68 பேர் இறந்துள்ளனர். தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளவர்கள் தான் போதை பொருட்களை கடத்துகின்றனர். தி.மு.க.,வில் புதிதாக போதை பொருள் அணி என்று ஒன்றை உருவாக்கலாம். இவ்வாறு பேசினார்.