| ADDED : டிச 04, 2025 05:20 AM
சிவகங்கை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 382 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 59 மாணவர்கள் வெற்றி பெற்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகள் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 382 மாணவர்கள் நவ.25 முதல் 28 வரை கரூர், ஓசூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 19 மாணவர்கள் முதல் பரிசும், 28 மாணவர்கள் இரண்டாம் பரிசும், 12 மாணவர்கள் 3ஆம் பரிசும் பெற்றுள்ளனர். இந்த 59 மாணவர்களும் சென்னையில் நடைபெறஉள்ள பரிசளிப்பு விழாவில் பரிசு பெற உள்ளனர்.