| ADDED : ஜூலை 12, 2024 01:36 AM
தென்காசி:தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைகோவில் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்; தொழிலாளி. இவரது மகன் கவுசிக், 10; ஐந்தாம் வகுப்பு மாணவன். இவர், கடந்த 7ம் தேதி சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். அங்குள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர் அமிர்தலால், சிறுவனின் தலையில், 'ஸ்டேப்லர்' வாயிலாக, 14 இடங்களில் பின் அடித்துள்ளார்.அடிபட்ட இடத்தில் சுத்தம் செய்யாததாலும், மணல் துகள்கள், 'ஸ்டேப்லர்' ரத்த காயத்தால் இரண்டு நாட்கள் சிறுவன் அவதிப்பட்டான். அந்த இடத்தில் மேலும் புண் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றதை தொடர்ந்து, சிறுவனை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தலையில் இருந்த 'ஸ்டேப்லர்' பின்களை அகற்றி தையல் போட்டனர்.தென்காசி மாவட்ட நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா விசாரணையில், 12 ஆண்டுகளாக அமிர்தலால் மருத்துவமனை நடத்தி வந்ததும், அவர் முறையாக மருத்துவம் படிக்காததும் தெரியவந்தது. துணை இயக்குனர் புகாரில் அச்சன்புதுார் போலீசார் அமிர்தலாலை கைது செய்தனர். சூர்யா மருத்துவமனையில் டாக்டர் என, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு பெயர் உள்ளது. அந்த மருத்துவமனைக்கு உரிமம் பெற டாக்டர் பாபு பரிந்துரைத்துள்ளார். இதனால், 12 ஆண்டுகளாக போலி மருத்துவமனைக்கு துணை போன அரசு டாக்டர் பாபு மீதும் நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாபுவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார். மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.