| ADDED : மே 02, 2024 05:45 AM
சின்னமனுார்: குச்சனுார் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட போலீஸ் அவுட் போஸ்ட் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இக்கோயில் புராதன மானதும், பிரசித்தி பெற்றதுமாகும். தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என தனி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. எனவே தினமும் திரளாக பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடியில் பெருந்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் மூன்றாவது வாரம் சனிக்கிழமை நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கில பக்தர்கள் கூடுவார்கள்.நீதித்துறை, போலீஸ், வருவாய்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என முக்கிய பிரமுகர்கள் தினமும் வருகின்றனர்.எனவே குச்சனுாரில்- போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு கோயில் வளாகத்தில் கட்டடம் ஒன்று ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அவுட் போஸ்ட் செயல்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்பட எஸ்.பி., சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.