| ADDED : ஜூன் 30, 2024 04:48 AM
எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதே வேளையில் தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல் ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ரோட்டையே சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சபரிமலை சீசனில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இவ்வழியே வருகின்றனர். குமுளி வரை சென்று திரும்பும் அரசு பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மலைப்பாதையில் நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களால் மேலும் அதிகமாக நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காண அரசு முன்வரவேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் எதிரொலியாக குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக முதல்வர் ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். ஆனால் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியை யார் செய்வது என்பதில் கூடலுார் நகராட்சி, போக்குவரத்து துறை, வனத்துறை இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக துறை ரீதியாக நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை சார்பில் பஸ்ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்து ரூ.5.5 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.2023 செப். 11ல் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. 10 மாதங்களாகியும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. பல நாட்கள் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அவ்வப்போது பெயரளவில் மட்டும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பயணிகள் நிற்க இடம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் அதனால் பணிகளை விரைவு படுத்த முன் வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.