உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் சின்னவாய்க்காலில் 700 ஏக்கரில் நாற்று வளர்ப்பு  பாதிப்பு நீர் மின் நிலைய ஷட்டரை துாக்குவதால் நீரின்றி தவிப்பு

கம்பம் சின்னவாய்க்காலில் 700 ஏக்கரில் நாற்று வளர்ப்பு  பாதிப்பு நீர் மின் நிலைய ஷட்டரை துாக்குவதால் நீரின்றி தவிப்பு

கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறுகிறது. கூடலூரில் ஆரம்பித்து பழனிச்செட்டிபட்டி வரை பாசன நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த 17 வாய்க்காலில் ஒன்று சின்னவாய்க்கலாகும். இது குள்ளப்பகவுண்டன்பட்டியில் துவங்கி சாமாண்டிபுரம், மஞ்சகுளம், சுருளிப்பட்டி ரோடு, கம்பம், காமயகவுண்டன்பட்டி ஏழரசு கோயில் வரை உள்ளது. இந்த வாய்க்கால் பாசனத்தில் 1400 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறும். பொதுவாக இரு போக சாகுபடியில் விவசாயிகள் நாற்று வளர்ப்பது, நடவு செய்வது, அறுவடை என அனைத்து பணிகளிலும் பிற பகுதி விவசாயிகளை விட 20 நாட்கள் முன்கூட்டியே செய்து விடுவார்கள். இந் நாளில் கம்பம் பகுதியில் நடவு செய்து 20 நாட்கள் முடிந்திருக்கும். இந் நிலையில் கடந்த அக். 17 ல் ஒரு நாள் பெய்த கனமழையால் கம்பம் பள்ளத்தாக்கில் பெரும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள 'பிவி 4 மைக்ரோ' நீர்மின் நிலையம் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்தது. இந்த மின் நிலையத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் என மூன்று குழுக்களை நியமித்து சேத விபரங்களை மதிப்பிட்டு வருகின்றனர். வாய்க்காலில் செல்லாத தண்ணீர் இரண்டாம் போகத்திற்கான நெல் நாற்று வளர்க்க தண்ணீர் வேண்டும். சின்ன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என்றால் , 'பிவி 4 மைக்ரோ' மின் நிலைய ஷட்டர்களை இறக்க வேண்டும். அவ்வாறு இறக்கினால் தண்ணீர் தேங்கி, சின்னவாய்க்காலுக்கு செல்லும். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் இரவில் ஷட்டரை மேலே தூக்கி விடுகின்றனர். இதனால் சின்ன வாய்க்காலில் தண்ணீர் செல்வதில்லை. காலையில் மீண்டும் ஷட்டரை இறக்குகின்றனர். அதன் பின் தண்ணீர் தேங்கி வாய்க்காலுக்கு வர பல மணி நேரம் ஆகிறது. இதனால் சின்ன வாய்க்கால் புரவில் 1400 ஏக்கரில் 700 ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்கிறது. மீதமுள்ள 700 ஏக்கர் தண்ணீர் கிடைக்காமல் நாற்று வளர்க்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இரவில் எதிர்பாராதவிதமாக மழை வெள்ளம் வந்தால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளவே ஷட்டர்களை வாரிய அதிகாரிகள் மேலே தூக்கி விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து திருநெல்வேலியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது , 'சேதமடைந்த மின் நிலையம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்படுகிறது. இரவில் ஷட்டர்களை மேலே தூக்குவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்கிறேன்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை