| ADDED : ஆக 04, 2024 02:30 AM
ஊத்துக்கோட்டை, :ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக வெளியேறும் கழிவுநீர், ஆரணி ஆற்றில் விடப்படுகிறது.இதில் முனீஸ்வரன் கோவில் தெரு பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லை. சில இடங்களில் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் இருந்தும், மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளது. சில இடங்களில் கால்வாய்களில் மூடி இல்லை. முனீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புகளை இணைக்கும் சாலையில் கால்வாய் மூடி உடைந்துள்ளது.இதனால் இவ்வழியே செல்பவர்கள் கால்வாயில் விழும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது வழி தவறி கால்வாயில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, ஊத்துக்கோட்டை பேரூராட்சி அதிகாரிகள்,பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்து இதுபோன்ற குறைபாடுகளை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.