உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் அரைகுறை சீரமைப்பு பணி வெள்ளை கோடு இல்லாமல் ஓட்டுனர் தடுமாற்றம்

நெடுஞ்சாலையில் அரைகுறை சீரமைப்பு பணி வெள்ளை கோடு இல்லாமல் ஓட்டுனர் தடுமாற்றம்

சோழவரம்: சென்னை - கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த நல்லுாரில் இருந்து, காரனோடை வரை உள்ள பகுதி, ஆங்காங்கே சேதம் அடைந்ததை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு முன், அங்கு புதிய சாலை அமைத்து புதுப்பிக்கப்பட்டது.ஆறுவழிச்சாலையாக உள்ள இப்பகுதி, இருசக்கர வாகனங்கள், கார், வேன், கனரக வாகனங்கள் ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கவும், ஆபத்தான இடங்களில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்று விபத்துகளில் சிக்குவதை தவிர்க்கவும், வெள்ளை கோடுகள் வரையப்பட்டிருக்கும்.சாலையின் நடுவில், எந்தவொரு இடைவெளியும் இல்லாமல், நீளமான வெள்ளைகோடு போடப்பட்டிருந்தால், அந்த சாலையில் வேகமாக செல்லக்கூடாது மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களை முந்தக்கூடாது.அதேபோன்று, சாலையின் நடுவில் வெள்ளைகோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால், முன்னாள் செல்லும் வாகனங்களை வலதுபுறமாக, கவனத்துடன் முந்தி செல்லலாம்.சாலையின் ஓரங்களில் இடைவெளியின்றி வெள்ளைகோடுகள் இருந்தால், அந்த கோட்டை தாண்டி செல்லக்கூடது.இந்த வெள்ளைகோடுகளை பின்பற்றி வாகன ஓட்டிகள் பயணத்தை தொடர்ந்தனர். ஒளிரும் விளக்குகள் உள்ள பகுதிகளில் குறைந்த வேகத்தில் பயணிக்க வேண்டும்.இதை பின்பற்றி வாகன ஓட்டிகள் பயணிப்பர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளன.ஆனால், சாலையின் நடுவில் மற்றும் ஓரங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வெள்ளைகோடுகள் வரையப்படாமலும், 'ரிப்ளக்டர்'கள் பொருத்தப்படாமலும் உள்ளன.தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அரைகுறை பணிகளால் வாகனங்கள் சாலையில் அதன் பாதையில் பயணிக்காமல் செல்வதால் அவை விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேற்கண்ட பகுதியில் வெள்ளை கோடுகள் மற்றும் தேவையான இடங்களில் ரிப்ளக்டர்கள் பொருத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை