| ADDED : மே 10, 2024 01:11 AM
பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிபேட்டை. இந்த கிராமத்தில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி நள்ளிரவு 12: 00 மணியளவில், சுந்தரேசன் நகர் பகுதியில், தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் திருட வந்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த கிரி, 55, என்பவர் கொள்ளையர்களை விரட்டி சென்றார். அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றனர். கிரி, அவர்களின் இருசக்கர வாகனத்தை இழுத்து கீழே தள்ளினார். இதில், நிலை குலைந்த கொள்ளையர்கள், கிரியை தாக்க முற்பட்டனர். உடன், பகுதிவாசிகள் ஏராளமானோர் அங்கு வந்ததில், கொள்ளையர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தையும் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். கொள்ளையர்கள் விட்டு சென்ற இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையர்களின் ஏ.டி.எம்., கார்டு, மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். இவை அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' யில் பதிவாகி உள்ளது. தற்போது, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் அத்திமாஞ்சேரிபேட்டை அருகே நாதன்குளம் பகுதியில், வேன் ஓட்டுனரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், சமீபத்தில் பள்ளிப்பட்டு பஜார் பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டு உடைக்கபட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவங்களால் பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.