திருவள்ளூர்,:குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, ஒன்றாவது வார்டு பகுதியான டோல்கேட், ஐ.சி.எம்.ஆர்., பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருப்பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆழ்துளை கிணறு வாயிலாக, புதை குழாய் வழியாக குடிநீர் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின், குழாய் வழியாக, வீடு, தெரு குழாய்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், டோல்கேட், சி.வி.நாயுடு சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, பள்ளம் தோண்டியது. குழாய் சீரமைத்த இடத்தில், பள்ளத்தை அரைகுறையாக மூடியுள்ளனர். சாலை சேதமடைந்ததால், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதியில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்கள், பள்ளத்தால் கடும் சிரமத்துடன் வருகின்றனர். கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால், சாலையோரம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த பள்ளத்தால், அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையோரம் குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.