திருவள்ளூர்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமழிசை பேருந்து நிலையம் மற்றும் இந்தியன் வங்கி அருகே தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில், பேருந்து நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், திறப்பு விழா அன்று மண்பானையில் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால், அந்த மண்பானையில் பல நேரங்களில் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. இதேபோல் இந்தியன் வங்கி அருகே அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இங்கும் பல நேரங்களில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால், சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தீர்க்க வரும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் திறப்பு விழாவிற்கு தலைவர்கள் படத்துடன் பிளக்ஸ் பேனர் வைப்பத்தில் காட்டும் அக்கறையை, தண்ணீர் பந்தலில் முறையாக தண்ணீர் வைப்பதில் காட்டுவதில்லை.தற்போது அக்னி வெயில் துவங்கவுள்ள நிலையில், தண்ணீர் பந்தலில் எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பராமரிக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், வரதராஜபுரம், காட்டுப்பாக்கம் பகுதியில், கடந்த 1ம் தேதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா அன்று அலங்கார பந்தல், கட்சி கொடிகள் என, ஆடம்பரமாக விழா நடந்தது.திறப்பு விழா அன்று மட்டும் இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், மோர், குளிர்பானம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு, தண்ணீர் பந்தல் மட்டுமே உள்ளது. இங்கு தண்ணீர் பானையும் இல்லை. இதே போல், குன்றத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் கடந்த மாதம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.விழா முடிந்த அடுத்த நாள், தண்ணீர் பந்தலில் தண்ணீர் வைக்கவில்லை. பந்தலும் அகற்றப்பட்டது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், சுய விளம்பரத்திற்காக பல இடங்களில் தண்ணீர் பந்தலை திறக்கின்றனர். இங்கு ஒரே ஒரு நாள் தண்ணீர் வைக்கப்படுகிறது.இதனால், மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. தண்ணீர் பந்தல் திறந்தால், கோடைக்காலம் முடியும் வரை, மண் பானையில் தண்ணீர் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.