| ADDED : ஆக 18, 2024 01:52 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சி எம்.ஜி.ஆர்., நகரில், புதுவண்ணார் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் புதுவண்ணார் தெருவில் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் தெருவின் முடிவில் கழிவுநீர் வெளியேறுவதற்கு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் ஆறாக செல்கிறது. மேலும் தெருவில் நடுவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பகல் நேரத்திலேயே அப்பகுதி மக்களை கடிக்கிறது. மேலும் தெருவில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கழிவுநீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எம்.ஜி.ஆர்., நகர் மக்களின் நீண்ட காலம் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.