| ADDED : ஆக 02, 2024 01:35 AM
திருவாலங்காடு:சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது மணவூர் ரயில் நிலையம்.இந்த ரயில் வழித்தடத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ரயில் போக்குவரத்து நிறைந்த தடம் என்பதால் 100 ஆண்டுகளுக்கு முன் தண்டவாளத்திற்கு குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.தற்போது இந்த சுரங்கப்பாதையில் சாலை சேதமடைந்து உள்ளதுடன், சாதாரண மழைக்கே கால் வரையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் பாகசாலை, எல்.வி.புரம், மருதவல்லிபுரம் உள்ளிட்ட 10 கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், மணவூர் அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி திருவாலங்காடு, பேரம்பாக்கம் பகுதிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளம் மேடாக உள்ள சுரங்கப்பாதை சாலையால் தாமாக விபத்தில் சிக்குகின்றனர்.பருவமழை தீவிரம் அடைந்தால் அதிகப்படியான மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளதுடன் வாகன ஓட்டிகள் பயணியர் சென்று வர முடியாத சூழல் உருவாகும்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.