| ADDED : மார் 02, 2024 11:22 PM
பொன்னேரி,:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருகில் உள்ள பெரிய ஆண்டார்குப்பம் பகுதியில், மிகவும் பழமையான வேத விநாயகர் கோவில் உள்ளது. குடியிருப்புகள் மற்றும், மூன்று தெருச்சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் தற்போது பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கோவில் முழுதும் மரம், செடிகள் வளர்ந்து உள்ளன. அவற்றின் வேர்கள் மூலவர் சன்னதிவரை சுவர்களில் பரவி உள்ளது. இதனால் கதவுகள் பெயர்ந்து விழுந்து கீழே கிடக்கின்றன. கட்டடடத்தின் கட்டுமானங்களும் சிதைந்து விழுந்து உள்ளன. சுற்றுசுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சாய்ந்த நிலையில் இருக்கிறது. கட்டடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அச்சப்படுகின்றனர். அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் அச்சத்துடன் அவ்வழியாக சென்று வருகின்றனர். இது குறித்து குடியிருப்பவாசிகள் தெரிவித்ததாவது:கோவிலில் பூசாரி ஒருவர் மட்டும் எப்போதாவது வந்து விளக்கு ஏற்றி, பூஜை செய்வார். அவரும் அச்சத்துடன் வந்து செல்கிறார். அச்சம் காரணமாக பக்தர்கள் யாரும் உள்ளே செல்வதில்லை. சுவர்கள் விரிசல்களுடன், இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் அசம்பாவிதங்களை எண்ணி அச்சத்துடன் வசிக்கிறோம். கோவிலும் பாழடைந்து இருப்பது வேதனையாக உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடும் முன், கோவிலை புனரமைக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.