நூறு நாள் திட்ட பணியாளர் மூன்றில் ஒரு பங்காக...குறைப்பு:40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால் அதிருப்தி
திருவாலங்காடு:தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள், ஊரக வளர்ச்சித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் பயன்பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும், 100க்கு 40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், கடம்பத்துார், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், லட்சக்கணக்கான பணியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நுாறு நாட்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சுழற்சி முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஒரு நாளுக்கு, 300 ரூபாய் வீதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட தொகுப்புகள் உள்ளன. கடந்தாண்டு வரை சராசரியாக, ஒரு தொகுப்புக்கு 100 பேர் வீதம் தேர்வு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதற்கேற்ப பணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. விளைநிலங்களில் வரப்பு அமைத்தல், பாத்தி காட்டுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளும் திட்டத்தில் வழங்கப்பட்டன.பாசனத்தின் போது, மண் கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளும், மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு பணிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு குறித்து, ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு விதிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 1,000 பேர் பணியாற்றிய ஒரு ஊராட்சியில், 330 பேருக்கு மட்டுமே பணி கிடைக்கும் நிலை உள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், வேலை பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.அதிலும், கடந்தாண்டு ஒதுக்கீடு நாட்களில், 70 சதவீதம் வரை பணியாற்றியவர்களுக்கு, மீதமுள்ள பணி நாட்களை நிறைவு செய்யும் வகையில், பணியாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், நுாறு நாள் வேலையை நம்பி குடும்பம் நடத்தும் ஏழை மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
மனித சக்தி நாட்கள் குறைப்பு
நூறு நாள் பணியை நம்பி என்னை போன்ற கணவனை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். எங்கள் குடும்பம் நூறு நாள் பணியை மட்டுமே நம்பி உள்ளனர். இந்தாண்டு பணியாளர் குறைப்பு மற்றும் 'மனித சக்தி நாட்கள்' குறைக்கப்பட்டு உள்ளது.அதன்படி, நூறு நாட்களுக்கு வெறும் 40 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, முதல்வர் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.மஹாலட்சுமி, 46,நுாறு நாள் பணியாளர், திருவாலங்காடு.
சிறப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
சிறப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவர்நுாறு நாள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அரசு கட்டடங்கள் பராமரித்தல், குளம் அமைத்தல், துார்வாருதல், சாலையோரம் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். சிறப்பு பணிகளாக கிராமங்களில் சிமென்ட் கல் சாலை அமைத்தல், தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.- ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி,திருவள்ளூர்.