உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் தொழிற்சாலையில் வேலையிழந்தவர்கள் மறியல்

கார் தொழிற்சாலையில் வேலையிழந்தவர்கள் மறியல்

80 பேர் கைதுகடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சியில் எச்.எம். என்ற கார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பி.சி.ஏ., என்ற மற்றொரு நிறுவனத்திற்கு மாறியது. இதையடுத்து தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த 22 நிரந்தர தொழிலாளர்கள் 158 ஒப்பந்த தொழிலாளர்கள் என 180 தொழிலாளர்கள் கடந்த 2019ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை வைத்தனர். முதல்வருடன் இ.கம்யூ., மாநில செயலர் முத்தரன் தலைமையில் மூன்று முறை பேச்சு நடத்தினர். பின் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மூன்று முறை தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சு நடத்தியும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் வேலையிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேற்று தனியார் தொழிற்சாலை நுழைவாயில் பகுதியில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து நேற்று தனியார் தொழிற்சாலை பகுதியில் ஏ.டி.எஸ்.பி.க்கள், விவேகானந்தா சுக்லா, மீனாட்சி மற்றும் திருவள்ளூர் டி.எஸ்.பி., அனுமந்தன், திருவள்ளூர் தாலுகா, நகர, மணவாள நகர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் பா.ம.க., இளைஞரணி செயலர் பாலயோகி, கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தா சுக்லா, மீனாட்சி ஆகியோர் பேச்சு நடத்தினர். சமரசம் ஏற்படாததால் வேலையிழந்த தொழிலாளர்கள் திடீரென சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக துாக்கி பேருந்தில் ஏற்றினர். முன்னாள் அமைச்சர் மற்றும் அனைத்து கட்சியினரையும் கைது செய்து, அரசு பேருந்தில் ஏற்றி காக்களூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 80 பேரை கைது செய்ததாக தாலுகா போலீசார் தெரிவித்தனர். திருவள்ளூர்தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

'மாஜி' அமைச்சர் எச்சரிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கூறியதாவது:தனியார் தொழிற்சாலையில் வேலையிழந்த தொழிலாளர்கள் நுழைவு வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் எங்களிடம் பேச்சு நடத்தி தீர்வு காணுங்கள் என சமரசம் பேசினர். நாங்கள் எத்தனை முறை பேச்சு நடத்துவது என கேள்வி எழுப்பினோம். இதையடுத்து காவல் துறையினர் எங்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ