| ADDED : செப் 01, 2011 02:03 AM
தூத்துக்குடி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லீம் பெருமக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது அன்பினையும், மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் இனிப்புகளை வழங்கினர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோச்பூங்காவில் நேற்று காலை நடந்த சிறப்பு தொழுகையிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலாணி தெரு, புதுத்தெரு, முத்தம்மாள்காலணி, ஜாகீர் உசேன்நகர் போன்ற இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டிணம், கயத்தாறு, பேட்மாநகரம், கோம்பலாபாத், ஆழ்வார்திருநகரி, உடன்குடி, ஆறுமுகநேரி, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம்,செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.