உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டுப்புழு வளர்ப்பில் நோயை தடுக்க செயல் விளக்க முகாமில் ஆலோசனை

பட்டுப்புழு வளர்ப்பில் நோயை தடுக்க செயல் விளக்க முகாமில் ஆலோசனை

உடுமலை : பட்டுப்புழு வளர்ப்பில், ஊசி ஈ மற்றும் வேர் அழுகல் நோயை தடுக்க விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என செயல்விளக்க முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது. உடுமலை அருகே சித்தக்குட்டை கிராமத்தில் மத்திய பட்டு வாரியம் மற்றும் பட்டு வளர்ச்சி துறை சார்பில் விவசாயிகள் நோய் தடுப்பு செயல்விளக்க முகாம் நடந்தது. பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய விஞ்ஞானி செல்வராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சியில், உடுமலை பகுதியில் சில இடங்களில் மல்பெரி செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படுகிறது. இந்நோய் ஒரு வகை பூஞ்சாணத்தின் மூலம் பரவுகிறது. நோயை கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை ஒன்றரை அடி உயரத்தில் வெட்டி விட வேண்டும். செடியை சுற்றிலும் பள்ளம் தோண்ட வேண்டும். பின்னர் 'நவீன்யா' மூலிகை மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வெட்டிய செடியின் மேல்பாகத்திலிருந்து கீழ்பாகம் நனையும் வரை ஊற்ற வேண்டும். பின்னர் பள்ளத்தை மூடி விட்டு, அருகிலுள்ள செடிகளுக்கும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருந்து அளித்த பின்னர் 5 நாட்கள் வரை தண்ணீர் பாய்ச்ச கூடாது. இம்முறையை பின்பற்றுவதால் வேர் அழுகல் நோயை அதிகளவு கட்டுப்படுத்த முடியும். நோய்த்தாக்குதல் மல்பெரி தோட்டங்களில் ஏற்படாமல் இருக்க செடிகளுக்கு சரியான அளவு உரங்களை அளிக்க வேண்டும். பரிந்துரைகளின்படி சாண எரு மற்றும் பசுந்தாழ் உரங்களை குறிப்பிட்ட அளவு அளித்தால் நோய் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கலாம். தற்போது உடுமலை பகுதியின் சில இடங்களில் குறிப்பாக தாந்தோணி, துங்காவி போன்ற பகுதிகளில் பட்டுப்புழுக்களுக்கு ஊசி ஈ தாக்குதல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் புழு வளர்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புழு வளர்ப்பு மனையை சுற்றிலும் கொசு வலை அமைக்க வேண்டும். மனையின் உள்ளே நுழையும் பகுதியில் முகப்பு அறை அமைத்து, ஊசி ஈக்களை கவர்ந்திழுக்கும் மாத்திரைகளை வைக்கலாம். 'நிஸோலிநிக்ஸ்தைமஸ்' என்ற ஒட்டுண்ணியை 100 முட்டை தொகுதிக்கு 2 பாக்கெட் வீதத்தில் புழு வளர்ப்பு மனையில் புழுவின் நான்காவது தோலுரிப்பிற்கு பிறகு விட வேண்டும். ஊசி பவுடரை புழுக்களின் 3 வது காலகட்டத்தில் தோலுரிப்பிற்கு பின் இரண்டாவது நாளும், நான்காவது தோலுரிப்பிற்கு பிறகு இரண்டு அல்லது ஐந்தாவது நாள் பரிந்துரைக்கப்பட்ட அளவு புழு வளர்ப்பு மனையில் தெளிக்கலாம். நோய் தடுப்பு முறைகளை பரிந்துரை அடிப்படையில் பின்பற்றினால், தரமான பட்டுக்கூடுகளை உருவாக்கலாம்', இவ்வாறு செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி