உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசித்தவர்களுக்காக... பாசக்கரங்கள் நீள்கிறது!

பசித்தவர்களுக்காக... பாசக்கரங்கள் நீள்கிறது!

''நான் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளைங்க அவன்; எனக்கு சாப்பாடு வாங்க போயிருக்கான் திரும்ப வந்துடுவான்'' என, வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள் அந்த தாய். இந்த காத்திருப்பு ஒரு நாள், இரு நாள் அல்ல. நன்காண்டுகளை கடந்தும்...''இது ஏதோ ஒரு கதையின் முன்சுருக்கம் அல்ல; நிஜம். திருப்பூர் பஸ் ஸ்டாண்டில், ஆதரவற்ற நிலையில் இருந்த, 67 வயது மதிக்கதக்க அந்த மூதாட்டியை காப்பகத்தில் சேர்த்தனர், 'பசியில்லா திருப்பூர்' அமைப்பினர்.சிவகாசியை சேர்ந்த அவருக்கும், மருமகளுக்கும் பிரச்னை ஏற்பட, தாயை ஒதுக்கி வைக்க முடிவெடுத்திருக்கிறார் அவரது மகன். திருப்பூருக்கு அழைத்து வந்து, பஸ் ஸ்டாண்டில் தன் தாயை இறக்கி விட்ட அவரது மகன், உணவு வாங்கி வந்து தருவதாக கூறிவிட்டு சென்றார். திரும்ப வரவேயில்லை. தவமாய் தவமிருந்து பெற்பெறுத்த பிள்ளை தன்னை அனாதையாக்கிய வலி கூட தெரியாமல், தன் மகனுக்காக காத்திருக்கிறார்.இப்படி, பல்வேறு சோகங்களின் அடையாளமாக நிர்க்கதியாய் விடப்பட்ட ஆதரவற்றோரை பராமரித்து வருகின்றனர், 'பசியில்லா திருப்பூர்' அமைப்பினர். அழுக்குப்படிந்த உடை, பல நாட்கள் குளிக்காததால் துர்நாற்றம் வீசும் உடல், அலங்கோலமாய் அழுக்குப்படிந்த வளர்ந்திருக்கும் தலைமுடி என, பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரங்களை முகவரியாக கொண்ட ஏராளமானோர் திருப்பூரில் உள்ளனர்.அவர்களை பார்த்து பலரும் ஒதுங்கி செல்லும் மனிதர்கள் நிறைந்த இம்மண்ணில், அரவணைத்து, முடி திருத்தம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, புண்ணிய பணியில் ஈடுபட்டு வருகிறது, பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை.

உதவும் மனம் வேண்டும்!

தங்களின் செயல்பாடுகளை பகிர்ந்தார் அறக்கட்டளை தலைவர் தமிழ்ச்செல்வன்....ஒரு வேளை உணவுக்கே வழியின்றி ஆதரவற்றோருக்கு மறு வாழ்வு கொடுக்கும் முயற்சியாக, பொதுநல சேவையோடு, கடந்த, 2017ல் இந்த அறக்கட்டளையை துவக்கினோம். கொரோனா சமயத்தில், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்; பாதிப்பில் இறந்த, 50க்கும் மேற்பட்டோரின் சடலங்களை நல்லடக்கம் செய்தோம்.ஆதரவற்ற நிலையில், நல்ல மனநிலையில் உள்ளவர்களை, காப்பகத்தில் சேர்த்து வருகிறோம். நோய்வாய்பட்டுள்ளவர்களை, அரசு மருத்துவமனையில் சேர்த்து வருகிறோம்; எங்களுக்கு மருத்துவத்துறையின் மகத்தான ஒத்துழைப்பும் கிடைக்கிறது.உதவும் உள்ளம் கொண்ட பலரும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க தாமாக முன் வருகின்றனர். தங்களின் திருமண நாள், பிறந்தநாள் உள்ளிட்ட சுப நாட்களில், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, புண்ணியம் தேடிக் கொள்கின்றனர். ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிவோரை அரவணைத்து, மறுவாழ்வு கொடுக்க செய்யும் பணிக்கு களப்பணியாளர்கள் தேவையாக இருக்கின்றனர். ஒரு ஆம்புலன்சும் தேவைப்படுகிறது. உதவும் மனம் இருப்பவர்கள் எங்களை (88834 - 53541) அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை