திருப்பூர்:பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் தொடர்புடையவரை, இரு நாள் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் சுற்றி பணத்தை செலவு செய்தது தெரிய வந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக், 45. இவர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனத்தை நடத்தினார். இதன் கிளைகளை திருப்பூர், ஈரோடு, சேலம் என, பல இடங்களில் துவங்கினார். அதில், 2 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு தொகை செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தார். இதனை நம்பி, தமிழகம் முழுவதும் பலரும் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுக்க ஆரம்பித்தனர். கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிந்தது. கடந்த, 30ம் தேதி தீபக் திலக்கை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரிக்க, மூன்று நாள் கஸ்டடிக்கு கோர்ட் அனுமதி கொடுத்தது. நேற்று முன்தினம் அவரை கஸ்டடியில் எடுத்து, இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை முடிந்த நிலையில், அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறியதாவது:தீபக் திலக்கிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் இடத்தை வாங்கியுள்ளார். விலை உயர்ந்த டிவிக்கள் ஏராளமானவற்றை வாங்கி குவித்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பறந்து பொழுதை கழித்துள்ளார். நிறுவன துவக்க காலத்தில், முதலீடு செய்தவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி, அதன் பின் வந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, போலீசார் கூறினர்.