திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க பசுமை ஆர்வலர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதால், மரக்கன்று நடவு பணி வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நட்ட மரக்கன்றுகள், இன்று, 30 அடி உயர மரங்களாக வானுயர வளர்ந்துள்ளன. 300க்கும் அதிகமான இடங்களில், குறுங்காடுகள் அமைத்ததால், பல்லுயிர் சுழற்சி மண்டலமாக வளர்ச்சி பெற்றுள்ளது.மரம் வளர்ப்பு திட்டத்தில், மரக்கன்று நாற்றங்கால் இடுவது முதல், குழி எடுப்பது, மண் ஆய்வு, தண்ணீர் ஆய்வு, சொட்டுநீர் பாசன வசதி என, பல்வேறு திட்டமிடலுடன் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.பத்தாவது திட்டத்தில், டிச., மாத இறுதிக்குள் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசுமை ஆர்வலர்களின் பேரார்வத்தால், விரைவில், 50 ஆயிரமாவது எண்ணிக்கையை தாண்டி மரக்கன்று நடும் நிகழ்வு நடக்கப்போகிறது.குன்னத்துார் அருகே உள்ள குறிச்சி பகுதியில், நல்லகவுண்டன் தோட்டத்தில், 240 மரக்கன்றுகள் நடப்பட்டன. அருள்குமார் என்பவரின் நிலத்தில், தேக்கு -140, மகோகனி -100 என, மரக்கன்றுகள் நடப்பட்டன. அருள்குமார், அம்பிகாதேவி, பிரனஈதா, தேவ் சஷ்டிக் ஆகியோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், அதிகபட்சமாக உடுமலை சுற்றுப் பகுதியில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது.நேற்றைய நிலவரப்படி, 45 ஆயிரத்து, 760 மரக்கன்றுகள் நட்டுமுடிக்கப்பட்டுள்ளன. பயனுள்ள மரங்களை நட்டு வளர்க்க விரும்புவோர், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்ட குழுவினரை, 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என்று தெரிவித்துள்ளனர்.