திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், வேளாண் துறை சார்பில், தென்னையை தாக்கும் நோய்கள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி தென்னை மரங்களில் கேரள வேர்வாடல் நோய் பரவுகிறது. இந்த நோய் தாக்கத்துக்கு பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியே காரணியாக உள்ளது. மட்டைகளின் மேல் பகுதி மஞ்சள் நிறமாவது முதல் அறிகுறி.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால், மரங்களை காப்பாற்றிவிடலாம். அடுத்தடுத்த நிலைகளில், ஓலைகளின் ஓரங்கள் கருகுவது, மரம் எலும்புக்கூடு போல் ஆவது என, நோய் தாக்கம் தீவிரமாகும். நுனி குருத்து அழுகல், பூங்கொத்து கருகுவது, குரும்பை உதிர்ந்து, காய்ப்பு திறனை இழக்கும்.நோய் பாதித்த முதல் இரண்டு நிலைகளுக்குள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, தென்னயை பாதுகாக்கமுடியும். மூன்றாவது, நான்காவது நிலைகளுக்கு சென்றுவிட்டால், காப்பாற்றுவது கடினம்; அத்தகைய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே நல்லது.இவ்வாறு, அவர் பேசினார்.
என்ன செய்ய வேண்டும்?
''ஒருங்கிணைந்த வாடல் நோய் மேலாண்மை மூலம், வேர்வாடல் நோய் பாதித்த தென்னைகளை காப்பாற்றலாம். மக்கிய சாண உரம் 50 கிலோ; வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ; பூரியா 1.3 கிலோ; சூப்பர் பாஸ்பேட் 2 கிலா; மூரியேட் ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ கலவையை, ஒரு மரத்துக்கு, ஓராண்டுக்கு வைக்கவேண்டும். ஒரு மரத்துக்கு டிரைகோ டெர்மா அஸ்பரெல்லம் - 100 கிராம்; பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம்; அசோஸ்பைரில்லம் 100 கிராம்; பாஸ்போ பாக்டீரியா 100 கிராம்; வேர் உட்பூசணம் 50 கிராம் வீதம், மக்கிய தொழு உரத்துடன் சேர்த்து, வேர் பகுதியில் இடவேண்டும். 40 மி.லி., தென்னை டானிக்கை 160 மி.லி., தண்ணீரில் கலந்து வைக்கவேண்டும். உர நிர்வாகம் மூலம், மண்ணை வளப்படுத்துவது மிகவும் அவசியம்'' என்றனர் வேளாண் அதிகாரிகள்.