திருப்பூர்:'பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகளை நடத்தி, ரொக்க பரிசு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்,' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2023 தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையில், பள்ளி மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதுவோரை ஊக்குவிக்கவும், அதன் அடிப்படையில் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி நடத்தி, மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.நடப்பாண்டு இதற்கான, 38 மாவட்டங்களுக்கு எட்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசாக, 3,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு முறையே, 2,000 மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவருக்கு முதல் பரிசு, 4 ஆயிரம், இரண்டாம் பரிசு, 3 ஆயிரம், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய். ஆக., முதல் வாரத்துக்குள் போட்டிகளை நடத்தி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்க வேண்டும். மாவட்ட கல்வித்துறை பொறுப்பு வழங்கும் தமிழாசிரியர்கள் இப்பணியை செவ்வனே செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.