திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கி செப்., வரை நடைபெற உள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்ததையடுத்து, அரசு திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அவ்வகையில், விடுபட்ட பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இம்மாதம் துவங்க உள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, திருப்பூர், பல்லடம், அவிநாசி உட்பட 13 ஒன்றியங்களில் உள்ள 265 கிராமங்களில், வரும் 11ம் தேதி முதல் செப்., 10ம் தேதி வரை, மொத்தம், 77 முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பராமரிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் உள்பட ஏராளமான பதிவுகள் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களுக்கு உரிய ஆவணங்களுடன் சென்று, அரசு துறை சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கான பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. மின்னாளுமை முகாமை மாவட்ட மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். எந்தெந்த சேவைகள் கிடைக்கும்
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்பு, மின்வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை, கால்நடை, வேளாண் ஆகிய 15 அரசு துறை சார்ந்த 44 சேவைகள், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வழங்கப்படும்.புதிய மின் இணைப்பு, டேரீப் மாற்றுதல், மின் இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட மின்வாரியம், நில அளவை, பட்டா மாறுதல், உட்பிரிவு, சாதி, வருமான சான்று உள்பட வருவாய்த்துறை சான்றுக்கான விண்ணப்பம், காலதாமத பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, பென்ஷன், புதிய குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதி, வர்த்தக அனுமதி, கூட்டுறவு சங்க கடன்; ரேஷன் கார்டு பெயர் மற்றும் முகவரி மாற்றம்.டி.டி.சி.பி., அனுமதி, புதுமைப்பெண் திட்ட பதிவு, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இ-பட்டா, தாட்கோ லோன், நீட்ஸ், பி.எம்.இ.ஜி.பி., உள்பட பல்வேறு வகையான தொழில் கடன்கள். நில அபகரிப்பு, பொருளாதார குற்றங்கள், மோசடி, போக்சோ புகார்கள்; புதுமைப்பெண் திட்ட பதிவு; மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு.