உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் தி.மு.க., பூஜ்ஜியமாகும்: முதல்வருக்கு ஜெயராமன் பதிலடி

திருப்பூரில் தி.மு.க., பூஜ்ஜியமாகும்: முதல்வருக்கு ஜெயராமன் பதிலடி

திருப்பூர்; உடுமலையில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் தோல்வி, மேற்கு மண்டலத்தில் இருந்தே துவங்கும்' என்று சாடியிருந்தார். இதுகுறித்து அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: 'திருப்பூர் மாவட்டம்' என்ற பெயரை மட்டும் அறிவித்துவிட்டு, 10 ஆண்டுகள் தி.மு.க., காணாமல் போய்விட்டது. மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை, அ.தி.மு.க., உருவாக்கியது. சாயத்தொழில் முடங்கிய போது, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் கொடுத்து, முதல்வரான மூன்றாவது நாளில், ஜெயலலிதா உயிர்கொடுத்தார். திருப்பூரில், 337 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லுாரி; 948 கோடி ரூபாயில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள்; 150 கோடி ரூபாயில் நொய்யல் சீரமைப்பு, 1063 கோடி ரூபாயில் 4வது குடிநீர் திட்டம், 604 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை; அவிநாசி -அத்திக்கடவு திட்டம் என, பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திட்ட பணிகளை செய்தோம். தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டு களில் எந்த பணிகள் நடந்தது என்பதை, திட்ட மதிப்பீட்டுடன் கூற முடியுமா? என்ன செய்தீர்கள்; எவ்வளவு கோடி ஒதுக்கப்பட்டது என, வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களுக்கு, திறப்பு விழா மட்டும் தி.மு.க., ஆட்சியில் நடந்துள்ளது. முதல்வரின் அலங்கார பேச்சை, மக்கள் நம்ப மாட்டார்கள்; வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், தி.மு.க., தோல்வியடையும்; திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க., பூஜ்ஜியமாகும். மேற்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை, 2026 தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை