| ADDED : ஜன 04, 2024 10:05 PM
உடுமலை:கால்நடைகளின் தீவன தேவைக்காக, பருவமழையை ஆதாரமாகக்கொண்டு பரவலாக உடுமலை பகுதி விவசாயிகள் வெள்ளைச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், முன்பு உணவு தேவைக்காக வெள்ளைச்சோளம் அதிகளவு சாகுபடி செய்து வந்தனர். பல்வேறு காரணங்களால், சோளம் பயன்பாடு குறைந்ததால், இச்சாகுபடியையும் விவசாயிகள் கைவிட்டனர்.இருப்பினும், கால்நடைகளின் உலர் தீவனத்தேவைக்காக குறைந்த பரப்பில், இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது, வடகிழக்கு பருவமழை சீசனில், பரவலாக இச்சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: வறட்சியை தாங்கி வளரும் தன்மை சோளப்பயிர்களுக்கு உள்ளது. எனவே, மழைப்பொழிவு குறையும் போது, இச்சாகுபடியை மேற்கொள்கிறோம்.கால்நடை வளர்ப்போர் உலர் தீவனத்தேவைக்காக, சோளத்தட்டை வாங்கிச்செல்கின்றனர். இச்சாகுபடிக்கு குறைந்த செலவே பிடிக்கிறது. அறுவடையின் போது, போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.எனவே, பெரும்பாலானவர்கள் இச்சாகுபடி மேற்கொள்ள தயங்குகின்றனர். சோளத்தில் வீரிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே இல்லை.எனவே, வீரிய ரக விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்கினால், இச்சாகுபடி பரப்பு அதிகரிக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில், சிறு தானியமாக சோளம் குறைந்த விலையில் கிடைக்கும்.இது குறித்த திட்டத்தை, வேளாண்துறை வாயிலாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.