திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், பல்லடம் - நாரணாபுரம், சேடபாளையம் யுனிவர் சல்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்காக வினாடி - வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்படும். அவ்வகையில், பல் லடம், நாரணாபுரம் - சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில், 50 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த போட்டியில், 'எச்' அணியை சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவியர் வாலினி மற்றும் சஷ்மிதா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று, சிறப்பு பரிசை வென்றனர். பள்ளி தாளாளர் சாவித்திரி ராஜகோபால் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கிபாராட்டினார். 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.