பழங்குடியின நபர் மர்ம மரண வழக்கு: வனத்துறையிடம் விசாரணை தீவிரம்
உடுமலை: உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து, திருப்பூர் கலெக்டர், எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்ய பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கேரளா - தமிழக அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நேற்று நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மேல்குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த மாரிமுத்து, 53. கடந்த, மூன்று ஆண்டாக மூணாறு செண்பகத்தொழு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். ஜூலை, 30ம் தேதி, உடுமலை வந்து விட்டு, கேரளா மாநிலத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது கேரளா மாநிலம், சின்னாறு, கலால்துறை சோதனை சாவடியில், புலிப்பல் வைத்திருந்ததாக பிடிபட்டார். பின்னர் அவர்கள், கேரளா வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அன்று இரவு, 11:00 மணிக்கு, உடுமலை, அமராவதி வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அழைத்து வந்த நிலையில், மறுநாள் (31ம் தேதி) வனத்துறை அலுவலக கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வனத்துறையினர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த நிலையில், மாரிமுத்து உறவினர்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அடித்துக்கொன்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த செய்தி மற்றும் ஆணைய உறுப்பினர் புகாரின் அடிப்படையில், தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், திருப்பூர் மாவட்ட கலெக்டர், நாளை (21ம் தேதி) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் எஸ்.பி., மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, வரும் 29க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்ததால், உடுமலை ஜே.எம்.,1 மாஜிஸ்திரேட் நித்யகலா, சம்பவம் நடந்த போது, வனத்துறை அலுவலகம், சம்பவம் நடந்த இடம், பிரேத பரிசோதனை மற்றும் மாரிமுத்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், மாரிமுத்து கைது சம்பவத்தில் தொடர்புடைய கேரளா மாநில கலால் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், நேற்று அதிகாரிகள் ஜே.எம்., -1 நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பூட்டிய அறையில் பல மணி நேரம் விசாரணை நடந்தது.