உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடந்தது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, புக்குளம், கோட்டமங்கலம், விளாமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 11 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். ஒரு கிலோ முதல் தர கொப்பரை, குறைந்தபட்சமாக, ரூ.78 முதல் அதிகபட்சமாக, ரூ.84.10 க்கு ஏலம் போனது.இரண்டாம் தரம், குறைந்த பட்சமாக, ரூ.54க்கும், அதிகபட்சமாக, ரூ.74.70க்கும் இ - நாம் இணையதளத்தில் விலை கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.அதே போல், நேற்று, 3 விவசாயிகள், 284 மூட்டைகள் மக்காச்சோளம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு குவிண்டால், ரூ.22 ஆயிரம் முதல், 2,230 வரை, இ - நாம் திட்டத்தின் கீழ் விலை இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.