உடுமலை:''மகாபாரதம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் கண்ணன் திருவருள் கண்டிப்பாக கிடைக்கும்'' என சொற்பொழிவில், குரு சுபாஷ் சந்திர போசு பேசினார்.மடத்துக்குளம், வஞ்சிபுரம் திரவுபதியம்மன் பஞ்சபாண்டவர் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த, 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்சியான, பூ குண்டம் இறங்குதல், வரும், 24ம் தேதி நடந்து வருகிறது.இவ்விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், தினமும், புலவர் குரு சுபாஷ் சந்திர போசு, மகா பாரத தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.அதில் அவர் பேசியதாவது :மகா பாரதம், உலகின் மாபெரும் காவியமாகும்; 4,500 கதாபாத்திரங்கள் வருகின்றன. அக்காலத்தில், மகா பாரத கதையை சொல்லத்துவங்கியதும், ஒரு தென்னை மரத்தை நடுவார்கள்.தருமர் பட்டாபிேஷகத்திற்கு, நடவு செய்த அந்த தென்னையிலிருந்து, தேங்காய் போட்டு, பூஜை செய்வார்கள். அந்தளவிற்கு, 5 ஆண்டுகள் வரை நடந்திருக்கிறது.அந்தளவிற்கு பெரும் காப்பியமாகவும், மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், என்பதை ராமாயணமும், எப்படி வாழக்கூடாது, என மகா பாரதமும் உள்ளது.பாரதம் ஒரு ஞான பூமியாகும்; அதற்கு காரணம், இரண்டு பெரும் காப்பியமாகும். மகாபாரதத்தை கேட்டால் மனிதன் புனிதன் ஆகலாம்.மனித தருமங்களை நிறைய பேசுகிறது மகாபாரதம். கலியுகத்தில் மனிதன் தருமங்களை தவறாமல் கடை பிடித்து வாழ்வதற்கு மகாபாரதம் கட்டாயம் படிக்க வேண்டும்மகா பாரதத்தில் கண்ணன் ஒரு பாத்திரமாகவே வருகிறார். பகவத் கீதை அருள்கிறார். மகாபாரதம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் கண்ணன் திருவருள் கண்டிப்பாக கிடைக்கும்.மகாபாரதத்தை வியாசர் எழுதுகிறார். வியாசர் சொல்ல, விநாயகர் எழுதியது என்பது மகாபாரதத்தின் ஒப்பற்ற உயர்வாகும். முனிவர்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்கும் தகுதி படைத்தவர். அழியாத தர்மம் செய்தவர்.ஐந்தாவது வேதமாகவே மகாபாரதத்தை வேதவியாசர் படைத்துள்ளார், இதில், 48 தலைமுறை அரசர்கள் வரலாறு வருகிறது. அதற்கு பின்பே, பஞ்சபாண்டவர் வரலாறு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.