உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் துணை ஜனாதிபதி: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூரில் துணை ஜனாதிபதி: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர்: துணை ஜனாதிபதியான பின், முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு நேற்று வருகை தந்த சி.பி., ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள், பா.ஜ. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம், நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நேற்று மாலை வந்தார். ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள திருப்பூர் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி, மத்திய சிறப்பு படை பிரிவு, மாநில, மாநகர போலீசார் என, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, மங்கல வாத்தியம் இசைத்து, பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவரை வரவேற்கும் வகையில், தேசிய கொடியை கையில் ஏந்திய படி பா.ஜ.வினர் மற்றும் மக்கள் திரண்டு இருந்தனர். குமரன் சிலையில் இருந்து வெளியே வந்த துணை ஜனாதிபதி, வெளியில் சுற்றி காத்திருந்த கட்சியினர், பொதுமக்களுடன் கை குலுக்கி நன்றி தெரிவித்தார். அதன்பின், துணை ஜனாதிபதி நிருபர்களிடம் கூறுகையில், 'திருப்பூரில் இருந்து ஒருவர் இந்திய தேசத்தின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருப்பது, நம் ஊருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் மகத்தான பெருமை. அந்தப் பெருமையை தந்த பிரதமர் மோடிக்கு, நம் ஊரின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,' என்றார். இன்றைய நிகழ்ச்சி இன்று அதிகாலை, திருப்பூர் சந்திராபுரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கும் மற்றும் முத்துாரில் உள்ள, ஐந்து கோவில்களுக்கு துணை ஜனாதிபதி செல்கிறார். சுவாமி தரிசனம் முடித்த பின், செரீப் காலனியில் உள்ள வீட்டில், தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார். அதனை தொடர்ந்து, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில், தொழில் துறை சார்பில் நடக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனை முடித்த பின், மதுரைக்கு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை