| ADDED : ஜூன் 06, 2024 10:17 PM
எருமப்பட்டி:துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு சென்ற சேலம் கோட்ட பஸ்சின் மேற்கூரையில் மழைநீர் ஒழுகியதால், குடைபிடித்தபடி பயணித்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 'டி.என் 30 என் 1357' எண் கொண்ட சேலம் கோட்ட அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் எருமப்பட்டி, நாமக்கல், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி அமர்ந்திருந்தனர். இந்த பஸ் பவித்திரம் அருகே சென்றபோது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. எருமப்பட்டியில் மழை அதிகரித்து பஸ்சின் மேற்கூரை, ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் ஒழுக ஆரம்பித்தது.இதனால், பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். ஒரு சில பயணிகள் கையில் குடை பிடித்தபடி சீட்டில் அமர்ந்துகொண்டு பயணித்தனர். சில பயணிகள், மழைநீர் ஒழுகாத இடம் தேடி அலையும் நிலை ஏற்பட்டதால், அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.