உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே குடியிருப்பு பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்

விழுப்புரம் அருகே குடியிருப்பு பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டில் குடியிருப்பு பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:விழுப்புரம் நகராட்சி விரிவாக்க பகுதிக்குட்பட்ட பானாம்பட்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஏராளமான குடியிருப்புகளும் விரிவடைந்து வருகிறது.பானாம்பட்டு பாலாஜி நகர் பகுதியில், ஒரு வீட்டில் பட்டப்பகலில் பதுக்கி வைத்து பாக்கெட் சாராயம் விற்கின்றனர். இதனால் அதிகாலை 5:00 மணி முதல் சாராயம் குடிக்க அருகில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.இவர்கள் காலை 9:00 மணி வரை வருவதும் சொல்வதுமாக இருக்கின்றனர். அங்கு 50 முதல் 60 ரூபாய் வரை பாக்கெட் சாராயம் விற்கின்றனர். அதனை பலர் வாங்கிச் செல்வதும், சிலர் அங்கேயே குடித்து விட்டு பாலித்தீன் பாக்கெட்டுகளை வீசிச் செல்கின்றனர்.குடியிருப்பு மத்தியில், பட்டப்பகலில் இது போல் சாராயம் விற்பதால், அங்கு வரும் நபர்கள் சமூக விரோத செயல்களுக்கு காரணமாக அமைகின்றனர். பல நேரங்களில் மோதல் சம்பவங்களும் நடக்கிறது.புதுச்சேரி, மதகடிப்பட்டு, மடுகரை பகுதியில் இருந்து பட்ட சாராயத்தை வாங்கி வந்து, இவர்கள் பாக்கெட் போட்டு விற்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஏற்கனவே, கிராமப்புறங்களில் ஒதுக்கு புறமாக ஏரி, குளம், தோப்பு பகுதியில் சாராயம் விற்ற நிலையில், தற்போது குடியிருப்பு பகுதியிலேயே சாராயம் விற்கும் அவல நிலை தொடர்கிறது. இனியும் தாமதிக்காமல் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை