| ADDED : மார் 28, 2024 11:06 PM
திண்டிவனம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில், தி.மு.க.,கூட்டணி சார்பில் வி.சி.,கட்சி வேட்பாளராக துரைரவிக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை 6:00 மணியளவில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையம் பகுதியில் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதற்காக வி.சி., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டனர். இரவு 8:00 மணிக்கு பிறகும் திருமாவளவன் வராததால் பிரசாரம் துவங்கவில்லை. கூட்டம் அதிகரித்ததால், சென்னை மார்க்கத்திலிருந்து திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக, காவேரிப்பாக்கம் பகுதியில் போலீசார் பேரி கார்டு போட்டு தடுப்பு ஏற்படுத்தினர்இதனால் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பஸ்கள் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மேம்பாலத்தின் மேல்பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது.இதன் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பிரசாரம் செய்யுங்கள். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்யலாமே என பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர்.ஏற்கனவே திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சண்முகம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு டவுன் போலீசார் அனுமதி மறுத்து, காந்தி சிலை அருகே அனுமதி கொடுத்தனர்.தற்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி கொடுத்ததால், பல்வேறு ஊர்களுக்கு இரவு நேரத்தில் செல்லும் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.