திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் ஆனந்தன், வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, திண்டிவனம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்று, நகராட்சி அலுவலகத்திற்கு வந்து எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் மீட்டு, அவரை திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தன், காலை முதல் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டதால், பணிச்சுமை காரணமாக, மயக்கமடைந்ததாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இளையான்குடி எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பிரிவு உதவியாளர் பணிச்சுமை காரணமாக, கைகளை கத்தியால் அறுத்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பகவதிராஜா, 37. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அலுவலகத்தில் பொது பிரிவில் பணியாற்றினார். 15 நாட்களுக்கு முன், எஸ்.ஐ.ஆர்., பணிக்காக தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். சில நாட்களாக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று, தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த போது, சிறிய கத்தியால் கைகளை அறுத்து கொண்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.