மரக்காணம் : மரக்காணம் அருகே, நிலம் விற்ற பணத்தை தர மறுத்த சித்தப்பாவின் மகளை, கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரிப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார்; உப்பு வியாபாரி. இவரது மகள் கல்பனா, 3, நேற்று முன்தினம் மாலை, காணாமல் போனதாக, மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த அய்யனாரின் அண்ணன் கிருஷ்ணன் மகன் லட்சுமி நாராயணன், 32, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். கல்பனாவை கடத்தி, கொலை செய்தது தெரியவந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
லட்சுமிநாராயணன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், இரு குடும்பத்திற்கும் சொந்தமான பொது நிலம், 7 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. எங்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை, சித்தப்பா அய்யனாரிடம் கேட்டபோது, காலதாமதம் செய்தார். தொடர்ந்து கேட்டபோது, என் திருமணத்தின் போது தருவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்து, அவரது மகள் கல்பனாவை கடத்தி சென்றேன். சத்தம் போடாமல் இருக்க முகத்தை மூடியதால், மூச்சு திணறி இறந்து விட்டார். அதனால், அருகில் இருந்த குளத்தில், கல்பனா உடலை வீசி சென்று விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.