| ADDED : மே 07, 2024 10:26 PM
விருதுநகர்:விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் உள்ள மருந்துக் கடை உரிமையாளரிடம் 75,000 ரூபாய் லஞ்சம் பெற முயன்ற தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் தயாநிதி, 54. விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்துக் கடை நடத்தும் ஆனந்தராஜ், 49, என்பவரிடம் விதிமுறை மீறல் வழக்குகளை முடித்து தருவதற்காக, 75,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆனந்தராஜ் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஆனந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்தை தயாநிதியின் டிரைவர் மணிவண்ணன் அக்ரஹாரம் தெருவில் உள்ள மருந்துக் கடையில் வைத்து வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் காரில் மறைந்திருந்த தயாநிதியையும் கைது செய்தனர்.இருவரிடமும் விசாரணை நடக்கிறது.