| ADDED : ஜூலை 07, 2024 01:51 AM
விருதுநகர்: விருதுநகரில் ரோட்டோரம் வளரும் புதர்களால் தடுப்புகள் மறைவதால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. அதை சரிவர பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ஊரக இணைப்பு ரோடுகள், மாவட்ட ரோடுகள், நகர்ப்புற ரோடுகள், மாநில ரோடுகள் ஆகியவை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமானவை. இதில் ஊரக இணைப்பு ரோடுகளில் பல இடங்களில் தடுப்பு இல்லை. இதனால் இரவு நேரங்களில் கார்களில் வேகமாக வருவோர் பள்ளங்களில் வாகனங்களை விட்டு விபத்தில் சிக்குகின்றனர். தடுப்பு இருந்தாலும் அவற்றில் ஒளிரும் விளக்குகள் இல்லை. சில நேரங்களில் தடுப்பில் மோதியும் பலர் காயமடைகின்றனர்.இன்னொரு பக்கம் புதர்கள் அதிகளவில் வளர்ந்து தடுப்புகளை மறைக்கிறது. இதனாலும் விபத்து ஏற்படுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என இதை பராமரித்து புதர்களை அகற்றுவது யார் என உள்ளாட்சி அமைப்பினருக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இடையே குழப்பம் உள்ளது. சில நேரங்களில் நுாறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு ஊராட்சிகளே இதை அகற்றிவிடுவர். சில நேரங்களில் தொலைவு காரணமாக அப்படியே விட்டு விடுவர். இது போன்ற இடங்களில் பகலில் பிரச்னை இல்லை. இரவு வெளிச்சம் இல்லாத நேரங்களில் தான் சிக்கலே ஏற்படுகிறது. வேகமாக கார்களில் வருவோர் விபத்தை சந்திக்கின்றனர். விருதுநகரின் ஊர்ப்புறங்களில் அடிக்கடி நடக்கிறது. தடுப்பு இல்லாத இடங்களில் தடுப்பு ஏற்படுத்துவதும், தடுப்பு இருந்து புதர்மண்டியிருந்தால் அவற்றை அகற்றிவிட்டு அவற்றில் ஒளிரும் விளக்குகளை பொறுத்துவதும் தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.