| ADDED : ஜன 10, 2024 11:44 PM
விருதுநகர்:தமிழக அரசின் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்து 5 நாட்கள் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பொங்கலுக்கு முன் அரசு அதனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஜன. 5 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடந்த பேரணியின் போது பொங்கல் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டவுடன், அதே நாளில் தமிழக அரசு போனசிற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பின் இரண்டு நாட்கள் கழித்துதான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியிட்டு 5 நாட்கள் கடந்தும், பொங்கல் போனஸ் இதுவரை அரசின் துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பட்டியல் இடப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை சென்னையில் உருவாக்கம் செய்த பின்னர் தான் அனைத்து நிலை பணம் பெறும் பட்டியல் வழங்கும் அலுவலர்கள், தங்களின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ்சிற்கான பட்டியலை தயாரிக்க முடியும்.ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., வலைதளத்தை நிர்வகிக்கும் விப்பேரா நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டதாக தெரியவில்லை. நிதித்துறையின் இச்செயல் கருவூலத்துறை ஊழியர்களுக்கு இன்னலை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அரசு அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்போனஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.