உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்புவது தேவை

 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்புவது தேவை

விருதுநகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை. இப்பணியிடங்கள் இல்லாததால் வளாகத்தின் பாதுகாப்பு, துாய்மை கேள்விக்குறியாக மாறியுள்ளது. நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் செயல்படுகிறது. இவற்றில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து நீண்ட துாரத்தில் உள்ளது. தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் பெரும்பாலான நேரங்களில் செவிலியர், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இவற்றில் பணிபுரிந்த நிரந்தர பணியாளர்களும் தற்போது மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் இரவு நேரத்தில் தனியாக பணிபுரியும் செவிலியர், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் வளாகத்தின் துாய்மை பேண வேண்டிய பணிக்கு ஆட்கள் கிடைக்காத நிலை நீடிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்தது. ஆனால் அடுத்தாண்டு மீண்டும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இதுவரை கடைநிலை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள இரவு காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை