உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

கரூர்:நிலம் அபகரிப்பு புகாரில், கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, நேற்று அதிகாலை நிபந்தனை ஜாமின் வழங்கி, கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழிலதிபர். இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் தொழிலதிபர் பிரகாஷ், கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூன், 22ல் ஒரு புகார் அளித்தார். அதில், தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் மகள் ஷோபனா பெயரில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதாகக் கூறியுள்ளார். அதன்படி வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட, பலர் மீது கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளிலும், விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு கடந்த, 17 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு, வாங்கல் போலீசார் விசாரிக்கும் வழக்கு ஆகிய இரு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு, விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் முன், விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமின் வழங்க வேண்டும் என, வாதாடினர். ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் தர எதிர்ப்பு தெரிவித்தனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி பரத்குமார் நேற்று அதிகாலை, 12:15 மணிக்கு விஜயபாஸ்கருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதேபோல் நில அபகரிப்புக்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக போலி சான்றிதழ் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி சிறையில் உள்ள, சென்னை வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜும் ஜாமின் கேட்டு மனு செய்திருந்தார். அந்த மனுவையும் விசாரித்த நீதிபதி பரத்குமார்,அவரையும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை