| ADDED : ஏப் 29, 2024 06:06 AM
சிவகங்கை : ''ஒவ்வொரு தீர்ப்பிலும் நியாயம், சமத்துவம், ஒருமைப்பாடு எதிரொலிக்க வேண்டும்'' என சிவகங்கையில் நடந்த புதிய கூடுதல் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா பேசினார். சிவகங்கையில், 9.89 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கூடுதல் நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: நீதியின் அடையாளம், மரபை முன்னெடுத்து செல்வோம். சத்தியம் மற்றும் நேர்மையின் சுடர் இப்புதிய கட்டடத்தில் ஒளிர செய்வதை உறுதி செய்வோம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது தான் நீதித்துறையின் உறுதிபாட்டு சான்று. நீதிமன்றத்தில் நியாயம், சமத்துவம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகள் தீர்ப்பின் வடிவில் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆதிகேசவலு, வடமலை, குமரப்பன் வாழ்த்தினர். வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி பங்கேற்றனர். நீதிபதி சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.