சென்னை:தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை கமிஷனர் அதுல் ஆனந்த் மகள், யு.பி.எஸ்.சி., தேர்வில், 79வது இடம் பிடித்து, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வாகி உள்ளார்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும், யு.பி.எஸ்.சி., தேர்வு, கடந்த ஆண்டு, 1,143 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. மொத்தம் ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதினர். மெயின் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 134 பேர் தேர்வாகினர். நேர்முகத் தேர்வு முடிவில், தமிழகத்தில் இருந்து, 45 பேர் தேர்ச்சி பெற்றனர். அகில இந்திய அளவில், தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை கமிஷனர் அதுல்ஆனந்த் மகள் ஈஸானி ஆனந்த், 79வது இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவர் கிண்டி, அண்ணா பல்கலையில், கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்று உள்ளார். தன் நான்காவது முயற்சியில், ஐ.ஏ.எஸ்., ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐ.ஆர்.எஸ்., பணி ஒதுக்கப்பட்டது.தற்போது நடந்த தேர்வில், ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வாகி உள்ளார். தன் தந்தையை பார்த்து, அவரை போல் ஐ.ஏ.எஸ்., ஆக விரும்பி, இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.