| ADDED : ஆக 20, 2024 04:13 AM
சென்னை: அனைத்து அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்களிலும் நேற்று புதிய மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கின.தமிழகத்தில், 102 அரசு மற்றும் 306 தனியார் ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் இளைஞர்கள் பயிற்சி பெற்று, நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு படித்த மாணவர்களில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் நேற்று புதிய மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கின. சென்னை அம்பத்துார் அரசு தொழில் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில், அமைச்சர் கணேசன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்; இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், பஸ் சலுகை அட்டை ஆகியவற்றையும் வழங்கினார்.தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தையும் அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் சுந்தரவல்லி பங்கேற்றனர்.